Jeeva Samadhi

பவித்திரம் – புனிதமானது, தூய்மையானது, தெய்வீகத்தன்மை வாய்ந்தது. (ஆம்….. அதுதான் ஐயாவின் ஜீவசமாதி அமைந்துள்ள இடம்) பவித்திரமேடு – காலை பவித்திரம் கிராமத்தின் அருகே சற்று உயர்ந்த இடத்தைக் குறிக்கக்கூடியது.

பவித்திரத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணியர் பாலமலையில் எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

இத்திருத்தலம் கரூர் – கோவை செல்லும் நெடுஞ்சாலையில் , கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 12கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

ஐயா மனிதச்சட்டையில் இருந்தவரை தனக்கென்று எதையும் வைத்துக் கொண்டதில்லை. எத்தனையோ முறை அய்யாவிடம் கரூருக்கு அருகில் சற்று நிலம் வாங்கி தனிக்குடில் அமைத்து தங்கலாமே என்றபோது அந்த யோசனைகளை அவர் முற்றிலுமே நிராகரித்து விட்டார்.

சுவாமிகள் LGB போக்குவரத்து நிறுவனத்தில் பணியிலிருந்தபொழுது பலரும் வீடுமனை என்று வாங்கும் போது நீங்கள் இடம் ஏதும் வாங்கவில்லையா என்று அவரிடம் கேட்டால் அவர் கூறுவாராம், “இடமெல்லாம் வாங்கி போட்டாயிற்று கட்டவேண்டியதுதான் பாக்கி” என்று.

அவர்கள் “எங்கே இடம் வாங்கியிருக்கிறீர்கள்”; என்று கேட்டால், கரூருக்கு அருகே ஓடும் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள இடுகாட்டைக் காட்டுவாராம். இதை ஐயாவே கூறக் கேட்டவர்களில் ஒருவர் (சி. இராஜேந்திரன், IRS. துணைத் தலைவர்( பணி நிறைவு ) , சமரசத் தீர்ப்பாயம், தென் மண்டலம், சென்னை. ஐயா இப்படி தனக்கென்று எதையுமே சேர்த்து வைத்துக் கொள்ளாதவர் சுவாமிகள்.

அய்யா நவம்பர் 25, 2012 ஆம் தேதி இரவு முக்தி அடைந்தபொழுது அன்பர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்தநாள் அய்யாவுக்கு எங்கே ஜீவசமாதி எழுப்புவது என்ற கேள்வி எழுந்தபொழுது கரூரிலோ அல்லது அருகில் எங்காவதோ கரூர் அன்பர்களுக்கும் ஏற்கனவே கரூருக்கு பலமுறை வந்து போவோர்க்கும் வெளியூர் அன்பர்களுக்கும் ஏற்றவாறு இருக்கவேண்டும் என்ற கருத்தை மனத்தில் கொண்டு இடத்தை தேர்வு செய்ததில் மானாமதுரை சுவாமிகளின் பங்கு அளப்பரியது.

ஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள், அவர்களது முயற்சியால் திரு சிவராமன் என்ற ஐயாவின் 20 ஆண்டுகால பக்தரின் பொறுப்பில் இருந்த இடம் முடிவு செய்யப்பட்டது.

என்னே இறைவனின் திருவுள்ளம்! பவித்திரம் என்ற திருத்தலத்தில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கே இருந்து வடக்கே உள்ள வேலாயுதம் பாளையம் நகரில் உள்ள ஆறுநாட்டான் மலையிலிருந்து அருள்மழை பொழிவதும் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமிதான். ஐயாவின் பெயரும் பாலசுப்ரமணியம் தான். மூன்று திருத்தலங்களும் கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது.

அங்கேயே பவித்திர மேட்டில் ஐயாவின்
ஜீவசமாதி திருக்கோயிலும் அமைந்துள்ளது. இது குமாரகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் கரூர்-கோவை மாநில நெடுஞ்சாலையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ளது,

சுவாமிகள் வடக்கு முகமாக அமர்ந்த நிலையில் ஜீவசமாதியில் இருந்து அருள்பாலிக்கிறார். தரைமட்டத்திற்குக் கீழாக சுமார் 8 அடி ஆழத்தில் சித்த முறைப்படி அமர்ந்துள்ளார். அருகே செல்லும் சாலையிலிருந்து இந்த பகுதி சற்று தாழ்வாக அமைந்துள்ளதால் தரைமட்டத்திற்கு மேல் சுமார் 8 அடி உயரத்திற்கு 6’X6’ கருங்கல் பீடமைத்து அதன் மேல் ஆகம விதிப்படி சிவலிங்கம் ஒன்று ஐயாவின் சீடர்களில் ஒருவரான ஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் மானாமதுரை அருள்மிகு பிரத்யங்கரா தேவி ஆலயம், அவர்கள் முன்னிலையில் 12.1.2013 அன்று அமைக்கப்பட்டது. இந்த நாள் அய்யா முக்தி அடைந்த 48வது நாளாகும். அதற்கு முந்தைய நாளும் மண்டல பூஜையின் போதும் ஏறத்தாழ 3000 பக்தர்கள் பல ஊர்களிலிருந்கும் வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

பூஜைகள்
தினமும் 4 கால பூஜை (காலை 6.30 – 7.00, மதியம் 12.00 -12.30, மாலை 4.00 – 4.30, 6.00 – 6.30) சுவாமிகளின் ஜீவசமாதியில் நடைபெற்று வருகிறது. இதைத்தவிர ஒவ்வொரு மாதமும் 6 சிறப்பு பூஜைகளும்–தமிழ் மாதம் முதல் தேதி, சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரம் பூரட்டாதி, சித்தி நட்சத்திரம் ரேவதி, பிரதோஷம், அமாவாசை பௌர்ணமி –அதைத்தொடந்து அருள்பிரசாத அன்னதானமும் சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.

இத்துடன்  ஒவ்வொரு வருடமும் குருபூஜை கார்த்திகை மாதம்  முதல் ரேவதி நட்சத்திரத்தன்று நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான அன்பர்கள் கரூர் வந்து பங்கேற்கின்றனர்.

ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிகள்
ஜீவசமாதித் திருக்கோயில்
குமாரகவுண்டன் புதூர்
பவித்திரம்
அரவக்குறிச்சி தாலுகா
கரூர் – 639002